Posts

Showing posts from July, 2018

இரவு மழை

தனிமையை தோழியாக்கும் தூக்கத்தை எதிரியாக்கும் இந்த இரவை கடந்திட யுக்தி ஒன்று வேண்டும்.. நினைவலைகளை அடித்து ஞாபக மூட்டையை அவிழ்க்கும் இந்த இரவை அமைதியாக்கும் இசை ஒன்று வேண்டும்... எண்ணங்களை சிதறடிக்கும் மூளையை கலங்கடிக்கும் இந்த இரவின் வாயடைக்க வார்த்தை ஒன்று வேண்டும்.. நாட்காட்டியை புரட்டி போட்டு கடந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இழுத்து செல்லும் இந்த இரவை நிகழ் காலத்தில் கட்டிடும் கயிரொன்று வேண்டும்.. எரியும் இந்த நெருப்பை அணைக்கும் மழை ஒன்று வேண்டும்.. அதில் முழுமையாய் நான் நனைந்திட வேண்டும்.. முடிவில்லா இரவுதனை கரைத்திடும் கரைப்பான் ஒன்று வேண்டும்.. அதில் இந்த கருப்பினை முழுமையாய் கரைத்திட வேண்டும்.. இந்த நீண்டதோர் இரவை தாங்கும் கோப்பை ஒன்று வேண்டும்.. ஒரு துளி மிச்சமின்றி அதை குடித்திட வேண்டும்..

வேடிக்கை பார்ப்பவள்-2

"ஒன்னு ஐஞ்சு..மூனு பத்து" ஒரு மூலையில் அரங்கேறும் வியாபார வியூகம் விற்றுத் தீர்ந்தது.. கானா பாடல் போல ஒலிக்கும் ஊர்களின் பெயர்கள் பாடகன் நடத்துனராய் கனவுகள் சில்லரையாய்.. ஆவிப் பறக்கும் கல் வட்டமாய் நீளமாய் வெண்மையாய் வண்ணமாய் வரைந்துக் கொண்டிருக்கும் அவன்.. கண்ணாடி காலில் தைக்கவில்லை அவன் செருப்பை தைத்துவிட்டான்.. கொசுக்கள் பறந்தன வாசம் போடுபவன் வந்துவிட்டான் மயிலிறகு குட்டிபோடா விட்டாலும் அவனை பட்டினிப் போடவில்லை.. மலர்கள் மென்மையானவையா? மூட்டை சுமக்கும் அவன் முகத்தில் வழியும் வேர்வை சொன்னது, "மலர்களும் கணக்கும்".. நான் நாலாவாறு தொலைந்திருந்தேன் நலம் விசாரித்தல் நடந்து கொண்டிருந்தது முதல் இருக்கைக்கும் கடைசி இருக்கைக்கும் பேருந்து இன்னும் நகரவில்லை..

வேடிக்கை பார்ப்பவள்

அவள் கையில் ஒரு கூடை பூக்கள் தலையில் ஒற்றை பூவில்லை அந்த பூக்கள் அனைத்தும் விற்பனைக்கே! அதோ,அங்கே தலைவலியுடன் தேநீர் போடும் அவர் மற்றவர்களின் தலை வலி தீர்க்க.. பசி நிறைந்த கண்கள், வண்டி நிறைய பழங்கள் விற்கவில்லை.. கிழித்து கிழித்து ஒட்டும் ஒருத்தன் சுவரொட்டியை.. உதட்டில் புன்னகை.. மேசை துடைத்த சிறுவன் கையில் சில்லறை.. சுத்தம் சோறு போடும் குப்பை பொறுக்கும் ஒருத்தி.. இவர்களை வேடிக்கை பார்ப்பவளாய் நான் பேருந்து நகர்ந்து விட்டது இன்னும் பல பாடங்கள் நான் படிப்பதற்கு முன்.. # பாடங்கள்தொடரும்

தனிமை கீதம்

Image
சிறு பறவை தாங்கிய கிளையின் தனிமை கீதம்.. யார் கேட்டது? சிறகு விரித்து பறவை பறந்ததும்,அந்தத் திசை நோக்கி அந்தக் கிளை ஆடியதே கடைசி.. அதன் பின் சலனமில்லை எந்தப் புயலுக்கும் செவி சாய்க்கவில்லை இதோ அந்தப் பறவையின் கால் தடங்கள் ஆறா வடுவாய் எந்த மழையும் அதை அழித்திடவில்லை.. தூக்கத்தில் கட்டிக் கொண்ட கால்கள் முத்தமிட்ட அலகுகள் கொத்தித் தின்றப் பழம் இவை எதையும் கிளை மறக்கவில்லை.. அந்த மரத்தில் பல கிளிகள் பல குயில்கள் கிளை மறுத்துவிட்டது! - ஹேமா படத்திற்கு நன்றி :  BalaGraphy

குட்டி கவிதைகள்

உதறி தள்ளியும் விழாமல் என் விரலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உன் நினைவு ***** நினைவு சாயம் வெளுக்காமல் இருக்க, குடை பிடித்து திரிகிறேன்.. கொஞ்சம், நிஜமென்னும் வெண்மை பூசிடு.. சற்று நனைந்துக் கொள்கிறேன் மழை முடிவதற்குள் *** கோடை வெயில் அவன் மேல் எல்லாம் வியர்வை துளிகள் மண் வாசனையுடன் மழை பெய்கிறது என்றேன் ஏதும் புரியாதவனாய் புன்னகைத்து நகர்ந்தான் புயலும் அடிக்கிறது என்றேன் திரும்பி‌ ஓர் பார்வை விடுத்தான் இப்பொழுது நான் ஏதும் பேசவில்லை மின்னல் தாக்கி வார்த்தைகள் தொலைத்த ஊமையாகி விட்டதால்..

நட்பெனும் பாதையிலே..

பார்த்தவுடன் புன்னகை ஒன்றைப் பரிமாறிக் கொள்ள, ஒரேப் பாதையில் இணைந்துக்கொண்டோம் கைக்கோர்த்து கவலைகள் மறந்து வண்ணங்கள் தீட்டிச் செல்கிறோம் வழி யாவும்.. வழியில், உடைந்த பட்டாம்பூச்சி சிறகை ஒட்டி பறந்தோடி கிணற்றில் போட்ட பழைய கனவை மீட்டு நம் கடமை மூட்டை சற்றே கணக்கும் போது தோள் கொடுத்து நினைவு கூழாங்கற்களை சேமித்துக் கொண்டே செல்கிறோம்.. நான் , நீ சோர்ந்தால் பூ மொட்டொன்று கொடுப்பேன் நீ, நான் சோர்ந்தால் சேமித்த மொட்டை மலராக்கி கொடுப்பாய் இப்படிதான் மொட்டெல்லாம் மலராகிறது இந்தப் பாதையில் என்றோ ஒரு நாள் நாம் பாதை மாறினால் இந்த மொட்டெல்லாம் மலராமலே போய் விடக்கூடும் அதற்காகவேனும் இனி சேமிக்கும் நினைவு கூழாங்கற்களை வழி நெடுக்க சிந்திக் கொண்டே போவோம் நாம் பாதை மறந்தாலும் அவை நம்மை இணைத்திடும் புன்னகை பூ பூத்து நட்பெனும் பாதையிலே..

போர் போர்

மாற்ற இயலாத ஞாபகங்கள் எனை ஆக்கிரமிக்க இரவின் தனிமையோ சுற்றி வளைத்தது எண்ண வாள் வீசி.. நான் தயாராக இல்லை! எனக்கும் எனக்கும் ஆனா இன்னுமோர் தூக்கம் தொலைத்த போரிற்கு.. மூளைக்கும் இதயத்திற்கும் போர் நடந்தால் நான் யார் பக்கம் நிற்பது?! என் வார்த்தை எடுபடவில்லை. போர் மூண்டது; மூளை நிதர்சனம் எனும் வாள் எடுத்து இதயத்தை கிழிக்க அவளோ பதிலுக்கு அன்பெனும் மாய வில் தொடுத்தாள்.. நடுநிசித் தாண்டியும் போர் நின்ற பாடில்லை நிராயுதபாணியாக நான்..! சட்டென, அவன் என்றோ ஒரு நாள் எனை பார்த்து சிரித்த சத்தம் கண்களின் வழியே ஊடுரும் நதியை துடைத்தது அவன் போட்ட சட்டை வந்து சேர்ந்தது கவசமாய் நிழற்படங்களோ சமாதான புறாவாய் போர் களம் காதல் தளமானது அடுத்தென்ன போரில் எனைக் காப்பாற்றியதற்கு அவனுக்கு நன்றி சொல்ல கிளம்பி விட்டேன் நித்திரை வாகனமெடுத்து..
வானவில் உடுத்தி மின்னல் மையிட்டு மண் வாச மழை தெளித்து காதில் விண்மீன் மிளிர முகில் மலர்களோ குழலில் மணக்க.. கைவளையலாய் சிறு பாறைகள் சிதற கதிரவன் கன்னத்தில் வண்ணமிட கடலன்னை அளித்தாள் சங்கு சிப்பிக் கால் கொலுசை.. இடி மேளம் முழங்க நிலா ரதம் ஏறி தென்றல் தோழி கதை கேட்டு காதல் தேவனை நோக்கி அவள்..

நெய்தல் -2

நாம் நுரையாடிய இடையே சற்று உரையாடிய அந்த கடல் அசையாது, நம் வருகையை எதிர்பார்த்து நாம் அணிந்த அலைகளும் கால் கட்டி அணைத்த மணலும் தனிமையில் வெறுமையாய் நாம் சேர்த்த சங்குகளை சிதரிவிட்டு வந்தேன் இனி அலைகள் ஓயாது... 

முதல் காதல்

***** புத்தக நடுவில் பத்திர படுத்திய   நீ தந்த ரோஜா   இன்றும் வாடாமல் **** கிழிந்த நிலையில்   பயண சீட்டு நினைவு படுத்தியது நம் முதல் பயணத்தை **** ஆண்டுகள் பத்தோடியும் மறக்கவில்லை எண்கள் பத்து உன் பழைய தொலைபேசி எண் **** நாள்காட்டி கிழிக்கையில்   உன் பிறந்தநாள் கோவில் சென்று வந்து விட்டேன் **** முகப்புத்தகத்தில் உன் முகம் பார்க்க   தவறவில்லை **** உன் பெயர் கேட்கையில் அன்னிச்சையாக திரும்பும் தலை ****

நெய்தல் - 1

Image
அவள் ஆச்சரியங்களின் உலகம் தேடல்களின் துவக்கம்   அவள் தட்டிக் கொடுப்பாள் தன்வசம் இழுப்பாள் கோபமாய் கொப்பளிப்பாள் அமைதியாய் ஆர்ப்பரிப்பாள் நெருங்குமுன் சத்தம் பாதிக் கடந்தால் நிசப்தம் மனித மூளைக்கு விளங்கிடாதப் புதிர் அவள் நீல வர்ணம் பூசிய அலங்காரி கருப்பும் பூசிக் கொள்ளும் மாயக்காரி சிலசமயம் கொள்ளைக்காரி பல உயிர்களின் சரணாலயம் பாடம் புகட்டும் பல்கலைக்கழகம் அவள் பார்க்க சலிக்காதவள் பரந்து விரிந்தவள் சூரியனையும் விழுங்குபுவள் நிலவின் குளிர்மையும் உடையவள் எச்சரிக்கை, அவள் மேல் காதல் மட்டும் கொள்ளாதே உன்னை மூழ்கடித்து விடுவாள் மூர்ச்சையாக்கிவிடுவாள் வேண்டுமென்றால் கட்டி அணைத்துக்கொள் ஓர் தாயை உணர்வாய் அவளிடம்! அவள்-கடல் 

பாலை - 1

பாலை யாழ் மீட்டி பருந்தோட்டும் ஒருத்தன் கேட்க செவியில்லை இசை மீட்டி என்ன பயன்? ஓயாமல் அடிக்கும் அனல் காற்றுடன் போட்டியோ? இரசவாதியோ? இல்லை இலட்சியவாதியோ? இருப்பை அடியில் இரும்பாய் ஒருத்தன்! ஊரும் பாம்பும் தேளும் அவனை தடவி செல்ல ஒரு புன்னகை உதிர்க்கிறான்! அவன் வளர்க்கும், செல்ல பிராணிகள் போலும்! கூவல் வேண்டாம் கானல் நீர் போதும் என்கிறான் திருடிய உணவெதற்கு கள்ளிப் பழம் போதுமென்கிறான் பறை அடித்துக் கொண்டே.. பறந்தலையில் எப்பொழுதும் அது ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.. கொற்றவை கேட்க! பிரிதலுக்கு பெயர் போன இடம் ஊடல் கொள்ளும் வரை அந்த சூறை கோட்பறை ஒளித்துக் கொண்டேதான் இருக்கும்.. அந்த வேனிற்காலம் முடிந்தே விட்டது ஆனால்,அவன் வாசிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.. குராப் பூவுடன் கலந்து வீசிய அந்த தனிமை கீதம் என்னைவிட்டு விலகவே இல்லை..

செங்கோல் பிறந்த கதை

அந்த சிறுவன் அடர்ந்த காடொன்றில் ஆடு வளர்த்திருந்தான்.. அன்பையும் .. மந்தை சேர்த்தான் பின் ஒருநாள், மாடு சேர்த்தான் பாடி திரிந்தான் கார் எல்லாம் மாரி பொழிய காட்டாறு பாடி சேரி ஓட மகிழ்ந்தானாம் ஆயர் அவன்.. களவு மறந்தான் கற்பு என்றான் தாய் வழி அழித்து தந்தை வழி வரைந்தான் ஆநிரை சேர ஆணவம் சேர ஆண் என்றான் அரசன் என்றான் இருத்தல் என்றான் பெண்கள் கடமைகளை ஆற்றி அடிமைகளாய் இருத்தல் என்றான் ஆநிரை கவர்ந்தான் வெற்றி என்றான் ஆணவம் ஏற்று வெறுப்பை பெற்றான் அவன் ஆடு மேய்த்த கோலை மட்டும் அவன் விடவே இல்லை அதன் பெயர் செங்கோல் என்றான் அந்த சிறுவன்!

காதலாகி கடலாகி

உப்புக் காத்து என ஒரசையில உன் வாசம் தடவிப் போகுதயா ஓயாம வீசும் அலகடலு, தோத்து நிக்குதிங்க என்கிட்ட அலையா அலையிறன் உனைத் தேடி கரையிறன் கலங்கரையா நான் நிக்க வழித் தேடி நீ வாரும்மையா நேரந்தான் கூடையிலே நெஞ்சமும் கொஞ்சம் கலங்குதையா பகல இரவு முழுங்குதையா நா சமைக்காத நண்டெல்லாம் நிம்மதியாய் வீடு சேர சமச்சதெல்லாம் நடு வீதி சேர.. சிப்பி தேடி அலையாத சீக்கிரமே நீ வாரும்மைய்யா.. முத்தெல்லாம் எனக்கெதுக்கு? உன் சிரிப்பேப் போதும்மைய்யா! கரையில மீனா நான் என் கடலே, உன் கடலுக்கு வெட கொடுத்து என தேடி வாரும்மையா.. என் கடைசி மூச்சுக்காத்த பரிசா நான் வச்சிருக்கேன்!