கடவுளின் கல்லறை

கார்மேகங்களிடம் கடன் வாங்கியக்
கருப்பை உடுத்திப்
பறவைகளின் எச்ச
அணிகலன்கள் அணிந்து
தன் தோல் உரித்துக்
குருதியும் சதையும்
கலந்தொழுகக்
கூடவே மிச்ச எலும்புகளும்
விழுந்துடைய
உடைந்த எலும்புத் துகள்களைத் தாங்கும்
கை கால் விரலோடு
நரம்பும் பின்னிப் பிணைந்து
அழும் அழுகும் நிலையில்
யாரும் கேட்பாரற்று
மண்ணுக்குள் புதைத்தச் சடலமாய்
சிதிலமடைந்த அந்தத்
தேவாலயம்...
அதிலே மிச்ச உயிரைக்
குடித்துக் கும்மாளமிடும்
கூகைகளும் சிலந்திகளும்..

அங்கே மெழுகுவர்த்திகள் எரிக்கப்படவில்லை..
பாவம் இருட்டறையில் இயேசுக் கண்கட்டி!

அங்கே மணியோசை கேட்பதில்லை..
தனிமை கீதமொன்றை
இசையின்றி திரும்ப திரும்ப
முனுமுனுத்துக் கொண்டே இயேசு!
அவரின் உடைந்த சிலுவையை
ஒட்டவைக்க ஆள்யாருமில்லாமல்..!

அங்கே திருமணங்கள் நடத்தப்படவில்லை..
புன்னகைகளும் பூக்களும்
புளித்துக் காய்ந்துவிட்ட இடமது!

பாடல்களும் பஜனைகளும்
பாவ மன்னிப்புகளும் ஜெபங்களும்
ஜனித்து மரிந்த இடமது..
பிராத்தனைகளும் புலம்பல்களும்
கூக்கரலிட்டு கூவி ஓய்ந்த இடமது..

பாலும் அப்பமும்
தின்றுக் கொழுத்து செரித்த
இடமது..
இன்றும் நினைவுகளை
அசைபோடும் கோபுரம்
விளைவாய் விழுந்துடையும்
அதன் காரைப்பல்!

இழுத்து இழுத்து மூடியக் கதவுகள்
இன்று மரத்துச் சலனமற்று..
பளிச்சிட்ட இருக்கைகளில்
இன்று தூசி அமர்ந்து..
வெள்ளை உடைகளும்,
துப்பட்டாத் தலைகளும்,
மழலைத் தடங்களும் தொலைத்த
அந்த தேவாலயக் கல்லறையின் மேல்
பூக்களைச் சிந்தும் குல்மோகர் மரம்..

Comments

Post a Comment

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!