தீராக் காதல்

நிலா வானம் காற்று காவியக்
காதல் வேண்டா..

மழையாய்‌ எனையணைத்து
மடியிலே துயில‌ ஏங்கும்
முகிலாய்..

அதிகம் ஆர்ப்பரிக்காத
ஆச்சரியங்கள் நிறைந்த
ஆழ்கடலாய்..

மகிகையாய் மனதை
மயக்கி கவிழ்க்கும்
மலை முகடாய்..

அன்பினருவியில் மூழ்கி
ஆனந்தப் புதையல் எடுக்கும்
அடர் வனமாய்...

கோபம் உருக்கி நகையாக்கும்
கர்வம் சமைத்து பணிவாக்கும்
தணலாய்...

காதல் வேண்டுமெனக்கு!

தேனே கரும்பே கனியே
எனப் பொய்யாய் இனிக்கும் காதல் வேண்டா...

மனதின் பிணி தீர்க்கும்
மருந்தின் கசப்பாய்..

வெற்று நாட்களையும்
சுவையேற்றும்
பொய்கோபக் காரமாய்..

மென்மை திரிந்து
இதழைக் கடைந்து
வெண்ணையெடுக்கும்
நொதித்தலின் புளிப்பாய்..

நிலைகொள்ளா எனை
கட்டுக்குள் வைக்கும்
அலைகடல் உப்பாய்....

காதல் வேண்டுமெனக்கு!

மலரே மணமே
உயிரே உலகமே
என வேண்டா..

விருட்சமாகும் விதையாய்
நம்பிக்கை உரமாய்
கைக்கொடுக்கும் விழுதாய்..

தட்டும் தென்றலாய்
வருடும் வாடையாய்
வியர்வை வாசமாய்..

திசுக்களின் இசையாய்
ஹார்மோனின் தாளமாய்
இதயங்களின் பாடலாய்..

உனக்கும் எனக்குமாய்
தினமோர் உலகம் படைக்கும்
தீராக்காதல் வேண்டுமெனக்கு!


Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!