வலியதிகாரம்
கட்டிய கனவொன்றை கலைத்து கல்கல்லாய் உடைத்து உடைத்தக் கையின் உதிரத்தை வறண்ட உதட்டிலே நிரப்பி உன் எச்சில் படிந்த கன்னங்களைக் கண்ணீரால் அழுத்தி துடைத்துத் தோர்த்து இமையிரண்டின் நடுவில் நிற்குமுன் பிம்பத்தை மறைக்க என்னுலகை இருளாக்கி அகராதியெல்லாம் உன் மொழியானதால் ஊமையாகி வாயடைத்து விரல் கோதிய கேசத்தில் வாசம் பூட்டி.. முடியாமல் முத்தப் பதியமிட்ட தேகத்தில் பட்ட முளைகளை களையாமல் உன் நெற்றி வேர்வை சேர்த்த வெற்றுக் கோப்பையை நுகர்ந்தே தாகம் தீர்த்து நெஞ்சக்குழியில் நீ வைத்த பூந்தோட்டத்தில் மிச்சமிருக்கும் சருகை மெல்ல தின்று இறுக அணைத்திருக்கையில் என் மேல் தைத்த உன் தேகம் பிய்த்து எடுத்ததால் வழிந்த குருதியோடும்.. ஆறுபோகம் அறுவடை செய்து நித்தமும் தின்று செரித்த நினைவுகளின் வாடையோடும்.. இறந்தே கிடக்கின்றேன் நான்!