கடவுளின் தற்கொலை

நான்
கண்களை
மூடிக் கொண்டேன்
குருதி சிதறி
அழியாதிருக்கும்
இவ்வண்ணம்
பிடிக்கவில்லை
என்று...

நாசி தூவாரம் ஏறி வரும்
பச்சிள ரத்த வாடை
உமிழ் நீர் முழுங்குகையில்
என்னில் கலந்து
என்னை அழித்து விடுமோ!!
குருடனாய் இருப்பதற்கு
அடைத்து விட்டேன்
நாசி கதவிரண்டையும்

கூக்குரலாய் கேட்கின்றது
கதறி அழும்
அக்குரலின் ஒலி..
புலம்பல்களுக்கும்
பிராத்தனைகளுக்கும்
பஞ்சமேதுமில்லை
இவ்வோசைகள்
என் நெஞ்சைக்
கிழித்து விடுமோ?
எதற்கு வம்பென
மடல் சன்னல் இரண்டையும்
மூடிவிட்டேன்..
கரங்களை முட்டுக் கொடுத்து...

கண் மூடி காதடைத்த போதும்
வாய் துடித்தது
"போதும் நிறுத்துங்கள்
மாந்தர்களே!"
என்றோங்கி உரைக்க...
அப்படி நடந்தால்
நான் வெறும் கல் அல்ல
கடவுள் என்றுணர்ந்து
எனை கொன்று விடுவார்களோ?
வார்த்தைகளைக் கொன்று
வாயடைத்தேன்...

சிலையான நான்
சிலை போல் நிற்பினும்
பதை பதைத்த
என் இதயம் மட்டும்
இருந்தென்ன செய்ய
இருப்பது ஒரு அரக்கன்
எனில் வதம் செய்யலாம்
எண்ணிக்கை அளவிழந்ததால்
நான் எனையே வதம் செய்கிறேன்...

போய் வருகிறேன் மனிதா!
புதியதோர் உலகம் பிறந்தால்
சற்றென்னைத் தட்டி எழுப்பி விடு
அது வரை என் செல் எல்லாம்
கல் ஆகாமலிருந்தால்...!

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!