மூங்கில் காடு

ஓங்கி வளர்ந்திருக்கும்
புல்லாங்குழல் உலகம்
அந்தப் புற்களின்
பச்சை உடுத்தி ஓடுகிறாள்
ஒவ்வொரு அசைவிலும்
இன்னிசை மீட்டுகிறாள்
என் கைப்பிடித்து
இழுத்துப் போகிறாள்

அவள் பாதம் பட்டு
சறுகுகள் உடையவில்லை
மூங்கில் உதிர்த்தது
பச்சை இலைகளை
அவள் மென்மை பாதம் பட
கிளைகளும் வளைந்து
அவள் கேசம் தொட முயற்சித்து
என் கூந்தல் கோதிச் சென்றது

நான் கிளை கை பிடித்து
ஊஞ்சலாடினேன்
விட்டு விடவில்லை
அவள் திரும்ப வந்து
கைக்கோர்த்துக் கொண்டாள்
தூரத்துப் பறவை காட்டும்
ஆசை காட்டி

இருவரும் ஓடினோம்
ஒற்றையடிப் பாதையிலே
இப்பொழுது அவளை விட
என் கால்கள் வேகம் எடுக்கத்
தொடங்கின
கதிரவன் கைத்தட்டல்
இலைப் போர்வையின்
ஓட்டை வழி ஒளித்தது
ஒளி கண் கூச
கண்மூடினேன்

ஒரு வினாடியில் அவள்
மறைந்துவிட்டாள்
காடு முடிந்துவிட்டது
என் கால்கள் மட்டும்
வந்த வழியிலே திரும்பி
ஓடிக் கொண்டே இருக்கிறது
அந்த முடிவில்லா மூங்கில் காட்டில்
ஓடிக் கொண்டே இருக்கும்,
இயற்கைத் தோழியின் மேல்
இருக்கும் காதல் தீரும் வரை....
அவள் திரும்ப வந்து
என் கைப்பிடிக்கும் வரை...

Comments

Popular posts from this blog

Dreams Beyond The Sky!!

காதலாகி கடலாகி

காலம் சிறியது!