முடிவிலி
விண்மீன் தெளித்த வீதியில் துள்ளித் திரிந்து பஞ்சு மிட்டாய் மேகத்தில் மிதந்து கதிரவன் கைகளில் குளிர் காய்ந்து நிலா தோழியிடம் கதைகள் கதைத்து களைத்து பூலோக விட்டமே ஆரமாய் ஓர் வட்டமிட்டு கடல் அலை ஊஞ்சலில் காத்திருந்தாள் அவள். அவள் ஓர் ஒற்றை சிறகு தேவதை! ஒற்றை சிறகு காற்றில் மிதக்க இன்னோர் சிறகோ கையில் தவிக்க சக தேவதைகளின் கேளிப் பேச்சோ ரீங்காரமாய் காதில் ஒலிக்க கண்ணீர் துளிர் சேர்த்து தனிமை கயிற்றிலே ஓர் மாலைக் கோர்த்து உடைந்த சிறகை ஒட்ட வைக்க தேடிக் காத்திருந்தாள் தேவனை.. ஓர் ஈரப் புன்னகையோடு! அவள் நீல கண்கள் நீள வானில் பதிந்திருக்க இருளை விரட்டி வெளிச்சம் பூட்டி தேவன் ரதம் வரும் சத்தம்! சத்தம் கேட்டு சட்டென துயில் களைந்திட தேவதை கதையின் முடிவறியா நான்! இப்படி அகிலும் முகிலும் மீறித்திரிந்து நிஜங்கள் மறந்து நிழலில் தொலைந்திடும் கனாக்கள் ஓர் முடிவிலி....